ஏனோ…ஏக்கம்!
ஏனோ…ஏக்கம்!
சிறு வயதில் எதுவும் பெரிதாக உணர்ந்ததில்லை. இப்போது என் சித்தி
பிள்ளைகள் எங்கள் வீட்டில் தங்கி உள்ளார்கள். அவர்கள் செய்யும் குறும்புத்தனம் கண்டதாலோ என்னவோ என் மனதில் ஏக்கம்!
‘அண்ணா’ என்ற உறவைக் குறைத்து எடை போடவில்லை. இருப்பினும் இந்த உறவில் தனிப்பட்ட முறையில் என் மனம் சில விஷயங்களை எதிர்பார்க்கிறது. அந்த சில விஷயங்கள் நுழைந்தால் அந்த உறவின் தனிப்பட்ட விஷயங்கள் பாதிக்கப்படுமா என்று தெரியவில்லை… இருப்பினும் என் மனம் அந்த சிறு விஷயங்களுக்கு ஏங்கி தவிக்கிறது. ஒருவேளை அம்மா என் அண்ணனை 'அண்ணா' என்று கூப்பிடச் சொல்லாமல் பெயர் சொல்லி கூப்பிடவைத்திருந்தால் இப்படி ஏங்கி போயிருக்க மாட்டேனோ என்னவோ.
என் சித்திகள் இருவருக்குமே இரண்டு பிள்ளைகள்- முதலாக பெண் குழந்தை இரண்டாவதாக ஆண் குழந்தை. அவர்கள் அக்கா- தம்பி ஆனார்கள். பேருக்கு தான் அக்கா-தம்பி, ஆனால் அவர்கள் பழகும் விதம் நண்பர்கள் போலவே இருக்கும்.
இரு சித்திமார்களுமே அவர்கள் மகன்களை 'அக்கா' என்று கூப்பிடச்சொல்லி பழக்கப்படுத்தவில்லை. இரண்டு தம்பிகளுமே அவர்கள் அக்காவை, சொந்தப் பெயர் வைத்து அழைக்காமல் செல்லப்பெயர் வைத்தே அழைப்பார்கள்.
தம்பி இருந்தால் 'டேய்'னு செல்லமா கூப்பிடலாம். அண்ணாவை ஒரு தடவ 'டா'னு கூப்பிடாலும் கோபித்துக் கொள்ளுவான். ஒரு சண்டையே நடக்கும்.
அவர்கள் அக்கா பருவமடைந்தால் (age attend), before age attend & after age attend பெரிய வித்தியாசம் தெரியாது எப்போதும் போல்தான் இருப்பார்கள். இதே தங்கை பருவமடைந்தால், அண்ணன்-தங்கை இடையே ஒரு இடைவெளி ஏற்பட்டிருக்கும்.
எல்லா அண்ணன்மார்களும் அவனுக்கு ஒரு தங்கை இருக்கிறாள் என்று அவர்கள் நண்பர்களிடம் காட்டிக்கொல்லமாட்டார்கள் (அதற்கு வேரொரு அர்த்தம் உள்ளது). ஆனால் எல்லா தம்பியும் அவனுக்கு அக்கா இருப்பதாக சொல்லிருப்பான். அந்த நண்பர்கள் அவளை அக்கா என்றே கூப்பிடுவார்கள்.
அண்ணன் இருக்கும் வீட்டில் பெண்களுக்கு ஆடைகள் அணிவதில் restrictions இருக்கும். அதே தம்பிகள் இருக்கும் வீட்டில் பெரிதாக கண்டுக்கப்படாது.
எனக்கு சொந்த தம்பிகள் இல்லை என்றாலும் என் சித்தி பிள்ளைகள் என்னை ‘அக்கா’ என்றே கூப்பிடுவார்கள், அவர்களுக்கு சாப்பாடு பரிமாறுகையிலும், பள்ளி பாடங்களில் உதவி செய்வதிலும் மிகவும் பொறுப்புள்ளவளாக உணர்ந்திருக்கிறேன்.
ஒரு சித்தியின் பிள்ளைகள் இருவருமே கல்லூரியில் படித்து வருகிறார்கள். இருவருமே இன்னும் கூட ஒரே மெத்தையில்தான் படுத்துக்கொள்வார்கள். இரவு முழுக்க கதை பேசி சிரித்துக்கொண்டு அவர்களை அறியாமல் களைத்துப்போய் தூங்கி விடுவார்கள்.
நானும் என் அண்ணாவும் பக்கத்து பக்கத்து இடத்தில் படுத்து பல வருடங்கள் ஆகிவிட்டது. இரண்டு வருடங்களுக்கு முன்னால் என் அண்ணா அவனது அறையில் இருந்து வந்து அம்மாக்கும் எனக்கும் இடையில் இருக்கும் சிறிய இடத்தில் அவனை குருகிக்கொண்டு, ஒரு ஐந்து நிமிடம் படுத்தான். அவன் உடல் பருமனுக்கு அந்த இடம் போதவில்லையோ என்னவோ சென்று விட்டான்.
இன்னொரு சித்தியின் மகன் நான்காவது படிக்கிறான். அவனுக்கு இரவு நேரங்களில் தனியாக restroom செல்வதற்கு பயம். அவனது 7th std படிக்கும் அக்காவைத்தான் துணைக்கு அழைத்துச் செல்வான். சில சமயங்களில் அவனை நான் குளிப்பாட்டியிருக்கிறேன். அப்போது ஒரு தாய்மை உணர்வு என்னுள் ஏற்பட்டது.
எப்போதும் அக்கா-தம்பிகள் இடையே சிறியவர் பெரியவர் வேறுபாடு இருக்காது, ஆனால் அண்ணன் தங்கை இடையே எப்போதும் ஒரு மரியாதை கலந்த இடைவெளி இருக்கும்.
தம்பிக்கு நீண்ட முடி வளர்ந்தால் கட்டாயப்படுத்தியாவது ரப்பர் பேண்ட் போட்டு விளையாடலாம். அது அண்ணனிடம் செய்ய முடியாது, ஏன் என்றால் அவன் நம்மை விட பெரியவன், குடும்ப பொறுப்பு இருக்கும், நம்முடன் இவ்வாறு விளையாடிட நேரம் இருக்காது.
தம்பியின் கைப்பிடித்தோ தோளில் கைபோட்டோ பொது இடங்களில் செல்லமுடியும். தம்பியை வண்டியில் டபில்ஸ் அடித்து செல்லலாம். அண்ணன் இருந்தால் அவர்கள் தான் எப்போதும் நம்மை டபில்ஸ் அடிப்பார்கள்.

எதாவது தப்பு செய்திருந்தால் அண்ணனிடம் சொல்லவே பயமாயிருக்கும், ஆனால் தம்பிக்கு தெரிந்தாலும் கமிஷன் கொடுத்து சமாலித்திடலாம்.
அண்ணன் தந்கை தராசு எப்போதும் சமமாக இருப்பதில்லை, மரியாதை என்ற பெயரில் வேறுப்பாட்டை உணர்த்துகிறது.
இவை எல்லாவற்றையும் விட, தங்கைக்குத்தான் திருமணம் முதலில் நடக்க வேண்டும் என்று ஒரு சம்பிரதாயம் உண்டு. வீட்டில் இருக்கும் அண்ணனுக்கு வயதாகிக் கொண்டே வருகிறது என்று அந்த தங்கைக்கு சீக்கிரமாவே கல்யாணம் செய்திடுவார்கள்.
அண்ணன்-தங்கை உறவில் இருக்கும் அன்பு மறைந்தே வெளிப்படும். அது தங்கைக்கு திருமணம் ஆகி சென்ற பின்னரே, அதிகம் வெளிப்படும் என்பதை அறிந்தாலும் என் மனம் அல்பத்தனமான சின்ன ஆசைகளையே விரும்புகிறது.
என்னுள் இருக்கும் ஏக்கம் என் உறவுகளையும் மற்றும் என் சூழலையும் வைத்தே நான் எழுதி இருக்கிறேன். இது அனைவருக்கும் பொருந்தாது.
இனி இருக்கும் கொஞ்ச நாளையாவது அவனுடன் சின்ன சின்னதாக குறும்புத்தனம் செய்து விளையாடிட ஆசையாக இருக்கிறது.



அற்புதம் அற்புதம் சிந்து...💓💓
ReplyDelete💝
Delete